உள்ளடக்கத்துக்குச் செல்

கோச்சடையான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
கோச்சடையான்
இயக்கம்சௌந்தர்யா ரஜினிகாந்த்
தயாரிப்புசுனில் லுலா
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜீவ் மேனன்
கலையகம்ஈராஸ் இன்டர்நேசனல்
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுமே 23, 2014 (2014-05-23)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
ஆக்கச்செலவு125 கோடி

கோச்சடையான் என்பது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, மே 23, 2014 (2014-05-23) அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். ரஜினிகாந்த் கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

கதை

கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.

அப்போது கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் அனைவரையும் விரட்டியடிக்கிறார் கோச்சடையான். கலிங்கபுரி வீரர்கள் தப்பித்து செல்லும்போது கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் கோச்சடையானின் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.

இவர்களை காப்பாற்றுவதற்காக கோச்சடையான் அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு, ஜாக்கி ஷெராப் அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கோச்சடையானும் சம்மதித்து அவரிடமே அனைத்தையும் விட்டுவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைத்துவிட்டு வருகிறார்.

ஆனால், கோட்டையபட்டின அரசர் நாசரோ கோச்சடையானை பழிவாங்க இதுதான் சரியான தருணம் என்று அவர்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி அவரை கொல்ல உத்தரவிடுகிறார். இவை அனைத்தையும் அறியும் கோச்சடையானின் இளைய மகனான ராணா தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். அதன்படி, கலிங்கபுரிக்கு செல்கிறார். அங்குள்ள படையில் சேர்ந்து வீரதீர சாகசங்கள் செய்து மன்னன் மனதில் இடம் பிடிக்கிறார். அந்நாட்டுக்கு படைத்தளதியாகவும் உயர்கிறார். கோட்டையபட்டினம் நாட்டு வீரர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படுவதை அறியும் ராணா, அவர்களை காப்பாற்றுவதற்காக ஜாக்கி ஷெராப்பின் மகனான ஆதியிடம், அடிமைகளாக இருக்கும் கோட்டையபட்டின வீரர்களை நம்முடைய படையில் சேர்த்து எதிரி நாடுகளிடம் போரிட்டால் அவர்களை எளிதில் வென்று நமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறான்.

ஆதியும் ராணாவின் சூழ்ச்சி தெரியாமல் இதற்கு சம்மதிக்கிறான். பிறகு அடிமைகளை தங்களது படையில் சேர்த்து, அவர்களை அழைத்து கொண்டு கோட்டையபட்டினம் மேல் படை எடுக்கிறான். ராணாவை கோட்டையபட்டின நாட்டின் இளவரசர் சரத்குமார் தலைமையில் படைகள் எதிர் கொள்கின்றன. களத்தில் சண்டை போடுவதற்கு பதில் ராணாவும் சரத்குமாரும் கட்டிப் பிடிக்கின்றனர். இருவரும் சிறு வயது நண்பர்கள் என்கிறார்கள். இதற்கிடையில், ராணாவின் தங்கை ருக்மணியை சரத்குமார் விரும்புகிறார். சரத்குமாரின் தங்கை இளவரசி தீபிகா படுகோனேவுக்கும் ராணாவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மன்னர் நாசரை கோபப்பட வைக்கிறது.

ஒரு கட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து நாசரை கொல்ல முயற்சிக்கிறான். அவனை வீரர்கள் பிடித்து முகமூடியை கழற்றும்போது அது ராணா என்பதை கண்டு அதிர்கின்றனர். தந்தையை கொன்றதற்காக பழி வாங்க வந்ததாக ராணா சொல்கிறான். அவனை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து ராணா தப்பிக்கிறான். இதற்கிடையே, தீபிகா படுகோனேவுக்கும் ஜாக்கி ஷெராப் மகன் ஆதிக்கும் அவசர அவசரமாக நாசர் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இறுதியில் தனது தந்தையை நயவஞ்சகத்துடன் கொன்ற நாசரை ராணா பழிவாங்கினாரா? தீபிகா படுகோனேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமாரும் இசை அமைக்கும் பணியை ஏ. ஆர். ரகுமான் செய்துள்ளனர்.

பெயர் காரணம்

கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மாறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710

சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை.[1].

சௌந்தர்யா விளக்கம்

கோச்சடையான் என்பது பாண்டிய மன்னனின் பெயர் என்பது ஒருபுறமிருந்தாலும், படத்தை இயக்கும் சௌந்தர்யா அஸ்வின், இந்தப் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணாவுக்கு முந்தைய பாகம்தான் கோச்சடையான் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்[2]

கதாநாயகி தீபிகா படுகோன்

கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் [3]. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமானார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.

கோச்சடையான் முதல் பார்வை

படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) [4] ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது.[5] ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. மே 9 ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது; பின்னர் மே 23 ஆம் தேதியன்று வெளியானது.

இசை

கோச்சடையான்
இசை
வெளியீடு9 மார்ச்சு 2014 (2014-03-09)
ஒலிப்பதிவுதிசம்பர் 2011—2014[6]
♦ பஞ்சதன் மற்றும் ஏ. எம். ஒலிப்பதிவு அரங்கு, சென்னை
♦ யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோ, மும்பை
♦ பஞ்சதன் ஹாலிவுட் ஒலிப்பதிவு அரங்கு, லாஸ் ஏஞ்சலஸ்
♦ AIR ஒலிப்பதிவு அரங்கு, இலண்டன்
மொழிதமிழ், தெலுங்கு, இந்தி
இசைத்தட்டு நிறுவனம்சோனி
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'ஹைவே
(2014)
கோச்சடையான் 'மில்லியன் டாலர் ஆா்மி
(2014)

வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற்றது.

பாடல்கள்

இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் டுவிட்டரில் வெளியானது. [7].

தமிழ் பதிப்பு

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "எங்கே போகுதோ வானம்..."  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:53
2. "மெதுவாகத்தான்.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் 05:09
3. "மாற்றம் ஒன்றுதான் மாறாதது.."  ரஜினிகாந்த், ஹரிசரன், வி.உமாசங்கர்(ஜதி) 05:56
4. "மணப்பெண் சத்தியம்.."  லதா ரஜினிகாந்த் 03:58
5. "இதயம்.."  ஸ்ரீநிவாஸ், சின்மயி 04:34
6. "எங்கள் கோச்சடையான்.."  குழுவினர் 04:07
7. "மணமகனின் சத்தியம்.."  ஹரிசரண் 04:06
8. "ராணாவின் கனவு." (பின்னணி இசை)இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர் 04:01
9. "கர்ம வீரன்.."  ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா 06:46

இந்தி பதிப்பு

# பாடல் பாடகர்கள்
1. "ஆயா குவாப் கா மௌசம்" ராகவ் மாத்தூர்
2. "தில் சாஸ்பியா" அரிஜித் சிங் & ஜோனிதா காந்தி
3. "போல் தே" ரஜினிகாந்த், ஜாவேத் அலி
4. "வாத வாடா - பெண்" ஷஷா திருப்பதி
5. "மேரா காம்" ஜாவேத் அலி, ஸ்ரேயா கோஷல்
6. "தாண்டவ்" கோச்சடையான் குழுமம்
7. "வாத வாடா - ஆண்" கார்த்திக்
8. "ரானாவின் கனவு"(Rana’s dream)(Instrumental) லண்டன் அமர்வுகள் இசைக்குழு
9. "ஏய் ஜவான்" ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரெய்ஹானா

தெலுங்கு பதிப்பு

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "சூதம் ஆகாசம் அந்தம்.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "மனசாயீரா.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம்  
3. "எந்தோ நிஜமே.."  ஹேமசந்திரா, மனோ  
4. "ஏடேமைனா சகா.."  லதா ரஜினிகாந்த்  
5. "ஹிரிதயம்.."  மனோ, சின்மயி  
6. "விக்ரமசிம்முதிவே.."  குழுவினர்  
7. "ஏடேமைனா சகி.."  உன்னிகிருஷ்ணன்  
8. "ராணாவின் கனவு" (பின்னணி இசை)இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர்  
9. "கர்ம வீருடு.."  ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா  

மேற்கோள்கள்

கோச்சடையான் திரை விமர்சனம்

  1. "'கோச்சடையன்' அறிவிப்பு!". 2011-11-24. Archived from the original on 2011-11-27. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  2. http://www.envazhi.com/?p=29828 பரணிடப்பட்டது 2011-11-29 at the வந்தவழி இயந்திரம்.
  3. http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
  5. "கோச்சடையானுடன் என்ன தைரியத்தில் மோதுகின்றன விஜய், அஜித் படங்கள்?". TamilNews24x7. Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
  6. "கோச்சடையானுக்காக தயக்கத்துடன் பாடிய ரஜினிகாந்த்: ஏ. ஆர். ரகுமான்". NDTV. செப். 8, 2013. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. நாக ரத்னா. "ரஜிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படப் பாடல்களின் பட்டியல் வெளியீடு". ஒன் இந்தியா. Archived from the original on 2014-03-06. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சடையான்_(திரைப்படம்)&oldid=3908931" இலிருந்து மீள்விக்கப்பட்டது